திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.31 திருக்குரங்கணில்முட்டம் பண் - தக்கராகம் |
விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங்
கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங்
கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணின் முட்டந்
தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே.
|
1 |
விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக்
கடைசேர்கரு மென்குளத் தோங்கிய காட்டில்
குடையார்புனல் மல்கு குரங்கணின் முட்டம்
உடையானெனை யாளுடை யெந்தை பிரானே.
|
2 |
சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்
காலன்றனை ஆருயிர் வவ்விய காலன்
கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டத்
தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே.
|
3 |
வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில்
தோடார்குழை யான்நல பாலன நோக்கிக்
கூடாதன செய்த குரங்கணின் முட்டம்
ஆடாவரு வாரவ ரன்புடை யாரே.
|
4 |
இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக்
கறையார்மிடற் றான்கரி கீறிய கையான்
குறையார்மதி சூடி குரங்கணின் முட்டத்
துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே.
|
5 |
பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங்
கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக்
குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டம்
நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே.
|
6 |
மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத்
தோடார்குழை தானொரு காதில் இலங்கக்
கூடார்மதி லெய்து குரங்கணின் முட்டத்
தாடாரர வம்மரை யார்த்தமர் வானே.
|
7 |
மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே.
|
8 |
வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்
அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங்
குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம்
நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே.
|
9 |
கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும்
வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்
குழுமின்சடை யண்ணல் குரங்கணின் முட்டத்
தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே.
|
10 |
கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன்
கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டஞ்
சொல்லார்தமிழ் மாலை செவிக்கினி தாக
வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |